Wednesday, June 13, 2012

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்

அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்

இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா

பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்லை

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன்,2012
# நவீன விருட்சம்
# திண்ணை

1 comment:

Sankarkumar said...

கவிதை வரிகள் வெகு இயல்பாக வந்து விழுந்திருந்தாலும், கவிதை சொல்லும்
கருத்து முழுமையாக வரவில்லையென எண்ணுகிறேன்.

சேர்ந்திருந்த காலத்து நினைவுகளை ஒட்டி, அதையே பிரிந்த பின்னரும்
பொருத்தி, தனக்காக மட்டும் வேண்டுமானால் ஒருவர் சொல்லிக் கொள்ளலாம்.

நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ ஆகாதெனும் விதியை நிறுவிக்கொண்டு பிரிந்த
பின்னர், அதெப்படி இருவருக்குமாக இங்கு ஒருவரே "இப்போதும்" பேச இயலும் என
விளங்கவில்லை.

புழுதிகளுக்கிடையில் புதைத்த அன்பு எவரால் என இன்னமுமா அந்த
கவிதைசொல்லிக்குத் தெரியவில்லை?

இருவரும் எப்படியோ பிரிந்து வாழ்ந்து கடந்த பின்னர், அனைத்து
நிகழ்வுகளும் இயல்பாகத் தொடரும் நிஜத்தில் இரவின் சாயல் துளியேதுமில்லை
எனப் பொதுவாக எப்படிச் சொல்ல இயலும்?

கடந்து வாழ்ந்து, [பிறகு மீண்டும் சேர்ந்து] வாழ்ந்தவர் இப்படிச்
சொல்லலாம்.

ஆனால், பிரிந்து வாழ்ந்து காலத்தைக் கடத்தும் இருவரில் ஒருவர்,
இருவருக்குமாகப் பேசியிருக்கும் வார்த்தைகள் பொருந்தவில்லை என்றே
கருதுகிறேன் நண்பரே!

ஒருமையில் அமைத்திருந்தால், சிறந்திருக்கும்!... தன்னைப் பற்றி மட்டுமே
..[பிரிவுக்குப் பின்] பேச இயலும் என்பதால் !

சொற்களின் வீச்சு நன்றாக வந்திருக்கிறது என்பதை மீண்டும் சொல்லிப் பாராட்டுகிறேன்.

[இந்தப் பின்நவீனத்தவம்லாம் புரியறதும், புரிய வைக்கறதும் கஷ்டம்னு
இன்னொரு நண்பர் சொன்னதுபோல நீங்களும் சொல்லிட மாட்டீங்கன்னு
நம்பறேன்!:))) ]