Friday, November 1, 2013

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி


மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது

சின்ன மேசையருகே முழந்தாளிட்டு
நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது
சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில்
நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ
மழை வருமா எனக் கேட்ட பொழுது சிரித்தேன்
பெருங்குளத்துக்கு மத்தியிலான காட்டைச் சுற்றிவர
நிலத்தில் பதித்திருந்த பச்சை விளக்குகள்
முன்னந்தியில் ஒளிர ஆரம்பிக்கையில் மழை
சட்டெனப் பெய்து வலுத்தது கண்டு கை கோர்த்துக் கொண்டோம்

அப்பொழுதெல்லாம் எவ் வடிவ மேகம் போல நீ மிதந்தாய்
என் புன்னகை ஒரு மந்திரக் கோலென்றாய்
எந்த அதிர்வுகளுக்கும் ஆட்படாத மனம்
அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச் சொல்லி
உனது தூரிகை தொடர்ந்தும் சித்திரங்களைப் பரிசளித்தது
என் நேசம் உன் புல்லாங்குழலின் மூச்சென்றானது

நீ இசைத்து வந்த வாத்தியக் கருவியை
அன்றோடு எந்த தேவதை நிறுத்தியது
உன்னிலிருந்தெழுந்த இசையை
எந்த வெளிக்குள் ஒளிந்த பறவை விழுங்கிச் செரித்தது

மழைக் காலங்களில் நீர் மிதந்து வந்து
விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி
பெருக்கெடுத்துப் பாய்ந்தோடும் நதியொன்றிருந்த
எனது கிராமத்தின் கதையை
இக் கணத்தில் உனக்குச் சொல்ல வேண்டும்
ஊரின் முதுகெலும்பாய்ப் படுத்திருந்த மலையின் ஒரு புறம்
சமுத்திரமும் இருந்தது

வாழ்நிலங்களைக் காக்கவென மூதாதையர்
அம் மலையைக் குடைந்து இரண்டாக்கி
ஆற்றின் தண்ணீர்ப் பாதையை
கடலுக்குத் திருப்பிய கதையையும்
கூடைகூடையாய் தொலைவுக்கு கால் தடுக்கத் தடுக்க
பெண்கள் கல் சுமந்து சென்று கொட்டிய கதையையும்
இரவு வேளைகளில் விழி கசியச் சொன்ன
பாட்டி வழி வந்தவள் நான்

அந்த மன உறுதியும் நேசக் கசிவும் ஒன்றாயமைந்த
நான் மிதக்கும் தோணியை ஒரு பூக்காலத்தில்
ஏழு கடல் தாண்டித் தள்ளி வந்திருக்கிறாய்
உனது எல்லா ஓசைகளையும் மீறி
'உஷ்ணப் பிராந்தியத்தில் வளர்ந்த செடியை
குளிர் மிகுந்த பனி மலையில் நட்டால்
ஏது நடக்குமென நீ அறியாயா' எனப் பாடும் இராப் பாடகனின் குரல்
தினந்தோறும் இடைவிடாது எதிரொலிக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ், அக்டோபர் 2013திண்ணை 

Wednesday, October 9, 2013

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி


மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை
உனது கண் பூச்சி
செவி நத்தை

கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன

திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது

தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்
கதை பகர்கிறாள் மூதாட்டி

வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்
அடையாளம் தந்திருக்கும் மரத்தை
வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென
மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை
சமையலறை ஜன்னல் காற்று
உன்னிடம் சேர்க்கிறது

மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் - பிறகும்
கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்

- எம்.ரிஷான் ஷெரீப் 
நன்றி
# அம்ருதா இதழ், சொல்வனம் இதழ், உயிர்மை, நவீன விருட்சம், பதிவுகள், திண்ணை

Tuesday, September 3, 2013

நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்



சந்திப்பதற்கான ப்ரியம்
பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து
ஆரம்பிக்கிறது
உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம்
தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி
                
ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது
நீ பரிசளித்த அக் கிளி
சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை
கிளையில்லை ; ஆகாயமில்லை
ஒரு கூண்டு கூட இல்லை

நீ கவனித்திருக்கிறாயா
விரல்களை அசைத்தசைத்து
நான் ஏன் ஒற்றைப் பாடலை இசைக்கிறேனென

உனது கவனத்திற்கும் அப்பாலான எனது கனவிற்குள்
நீயறியாதபடி
இருக்கிறது திரைகளேதுமற்ற ஒரு வாசச் சோலை

உனது கிளி அமர்ந்திருக்கும்
இச் சீமெந்து வாங்கின் மூலையில்
ஆறிக் குளிர்ந்திருக்கின்றன இரு தேநீர்க் குவளைகள்
வாசிக்க மனமின்றி மூடி வைத்த புத்தகத்தில் பட்டு
மின்னுகிறது பொன்னந்தி மாலை

எனது சோலைக்கு நீ வரவேயில்லை

தோட்டத்தின் ஐங்கோணப் பலகை வேலி தாண்டி
பூஞ்சோலைக் காவல் சிறுமி
நரம்புகள் பூக்காச் சிறு கரங்களில்
கிளியை ஒரு குழந்தையென ஏந்தி
பறந்து கொண்டிருக்கிறாள்

- எம்.ரிஷான் ஷெரீப்
09012012
நன்றி
# காலச்சுவடு இதழ் - 162, ஜூன் 2013உயிர் எழுத்து இதழ்வார்ப்பு, திண்ணைபதிவுகள்Painting - Mr.Roshan Dela Bandara

Monday, July 1, 2013

செங்குருவி



மான்கள் துள்ளும் அவ் வனத்தில்
செங்குருவிக்கென இருந்ததோர் மரம்
தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு
நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம்
செங்குருவிக்குப் பிடித்தமானது

அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து
பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம்
சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில்
குளத்தில் விட்டு வரும் செங்குருவி
கிளையில் அமர்ந்திருக்கும்

தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு
சொன்ன கதைகளையெல்லாம்
கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி
வானவில் விம்பம் காட்டும்
தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால்
அருந்தித் திளைத்திருக்கும்

அச் செங்குருவிக்கின்று
எந்தத் தும்பி இரையோ
இல்லை எக் கிளைக் கனியோ

நடுநிசியொன்றில் அகாலமாய்
செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின்
அதன் ப்ரியத்துக்குரிய மரத்திலேறிய சர்ப்பம் குறித்த
செய்தியை அறிந்துகொள்ளும்
அல்லிப் பூக்களும்
குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன
மேகங்களும்
பின்னர் துயரத்தில் கதறும்

- எம். ரிஷான் ஷெரீப்
07012012
 
நன்றி
# அம்ருதா மாத இதழ்யாத்ரா கவிதைகளுக்கான இதழ், உயிர்மை, திண்ணை, பதிவுகள் 

Saturday, June 1, 2013

கொக்குகள் பூக்கும் மரம்


தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது
காலையில் பறக்கும் கிளைகளை
தலையில் கொண்ட பெரு விருட்சம்

ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்
நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை
அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்

வெள்ளைப் பூக்களென
வந்து தங்கிச் செல்லும்
கொக்குகள்
இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்
கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்

இரை தேடி விடிகாலையில்
தமதிரு நெடிய கிளைகளையும்
வயிற்றில் பதித்துப் பறப்பவை
விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள
வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்

அவற்றைச் சேமிக்கும் மரம்
காற்றைத் தொட்டு
இறகுத் தூரிகையால்
ஓடும் ஆற்றில் கவியெழுதும்

- எம்.ரிஷான் ஷெரீப் 
நன்றி
# கலைமுகம்உயிர்மைநவீன விருட்சம்திண்ணைதமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம்பதிவுகள்

Wednesday, May 8, 2013

தெளிதல்




ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்
ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன
நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்
மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது

மிக எளிய ஆசைகள் கொண்டு
நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ
புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது
வெளிச்சம் எதிலுமில்லை

கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்
அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது
ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க
அலைகளும் எங்குமில்லை
நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது

எந்த நேசமுமற்று எப்பொழுதும்
உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்
ஏமாற்றத்தின் முதல் தளிரோடு
ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று

நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை

- எம்.ரிஷான் ஷெரீப்
13202320130501

நன்றி
# உயிர்மைதிண்ணை, பதிவுகள்